புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை எம்பி கபில் சிபல், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உண்மையான பிரச்னை தீவிரவாதம், அதனால் தான் நமது வெளியுறவுக்கொள்கையானது பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தின் தொழிற்சாலை என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஐநாவில் ஒரு திருத்தத்தை கொண்டு வரவேண்டும். பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடாக பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். 26/11 தாக்குதல்களுக்கு பிறகு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என்றும், தீவிரவாதிகள் அங்கு பிறக்கிறார்கள் என்றும் உலகிற்கு காட்டுவதற்காக பல்வேறு நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்புவதற்கு முடிவு செய்தார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை உருவாக்கும் தொழிற்சாலை என்ற சூழல் உலகில் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்துக்கு பின் அனைத்துக்கட்சி குழு பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று நான் கோரினேன். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் மோடி கேட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எங்களது ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்’’ என்றார்.
The post பாக்.கை தீவிரவாத நாடாக ஐநாவில் அறிவிக்க வேண்டும்: கபில் சிபல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.