ஊட்டி, மே 17: ஊட்டியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவர்களிடம் நேற்று தமிழகம் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள லவ்டேல் பகுதியில் ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் லாரன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ராணுவ கட்டுப்பாடு போன்று, ஒழுக்கம், குதிரை சவாரி, துப்பாக்கி சுடுதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய அளவில் சுமார் 5 இடங்களில் மட்டுமே இதுபோன்ற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் நேரில் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வில் மாணவர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘கல்வி என்பது ஒரு காலத்தில் எட்டா கனியாக இருந்தது, தற்போது அனைவருக்கும் கல்வி எளிதில் கிடைக்கிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து எதிர்காலத்தில் நாட்டிற்கு பயனுள்ளவர்களாக வர வேண்டும். பெரும் விஷயங்களை சாதிக்க வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என எடுத்துரைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். முதல்வரின் அறிவுரையை முறையாக பின்பற்றுவோம் என மாணவர்கள் அவரிடம் உறுதி அளித்தனர். பின்னர் முதல்வருடன் லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
The post முதலமைச்சரை சந்தித்து உரையாடிய லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.