நவ. 11ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 தேசிய கட்சிகள் மற்றும் 58 மாநில கட்சிகள் என மொத்தம் 64 கட்சிகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ என சில கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன. மதிமுக, பாமக கட்சிகள் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளன. இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026ல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்பட தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. தற்போது தமிழகத்தின் முதல்வராக, மு.க.ஸ்டாலின் 2021 முதல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது பதவி காலம் 2026 மே மாதம் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். அதேபோன்று, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளை அறிவித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கப்படும். 234 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு பொது சின்னம் வழங்கப்படும். இதற்காக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post நவ. 11ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: