பின்னர் மூத்த நிர்வாகிகள் சமரசம் செய்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை வன்னியர் இளைஞர் திருவிழா மாநாடு மே 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது பாமகவினருக்கு சற்று ஆறுதலை அளித்தது. ஏனென்றால் ராமதாஸ்-அன்புமணி இடையே இருந்த மோதல் போக்கு முடிந்து விட்டது என்றே நினைத்தனர். ஆனால் கடந்த 11ம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடந்த வன்னியர் இளைஞர் திருவிழா மாநாட்டிலும் எதிரொலித்தது. அந்த மாநாட்டில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து ராமதாஸ் கடுமையாக எச்சரித்து பேசினார். அப்போது, ‘கட்சிக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உழைக்காவிடில் யாராக இருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும்… அது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி’ என்று கூறினார். மேலும் கட்சியில் நான்தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பதுதான் முடிவு என்ற தோரணையில் அவரது பேச்சு இருந்ததால் மீண்டும் அன்புமணியை குறைத்து பேசி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த விழாவில் அன்புமணி பங்கேற்றபோதும் ராமதாசுடன் சரியாக பேசி கொள்ளவில்லை.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொள்ளவில்லை. காலை 8 மணியில் இருந்து தற்போது வரை ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, சேலம் அருள் எம்எல்ஏ, பொது செயலாளர் வடிவேல் ராவணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் தஞ்சை மா.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்ட தலைவர் சங்கர், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ், கோவை மாவட்ட செயலாளர் ராஜாதி ராஜா உள்ளிட்ட 9 மாவட்ட தலைவர்களும், 8 மாவட்ட செயலாளர்களும் வருகை தந்துள்ளனர். கட்சியின் செயல் தலைவர் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. இதனால் பாமக நிர்வாகிகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
கட்சியில் 108 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், தலைவர்கள் உள்ளனர். இதனால் 216 பேர் வந்திருக்க வேண்டும். அதைத் தவிர மாநில நிர்வாகிகள் வரவேண்டும். ஆனால் யாருமே வரவில்லை மாநாட்டிற்கு முன் இருவரையும் இணைத்து விட்டதாகவும் இருவரும் மேடையில் ஒன்றாக மாநாட்டை நடத்தி முடிப்பார் என்று கௌரவ தலைவர் ஜி.கே.மணி கூறி வந்த நிலையில் மாநாட்டிலும் மகனிடம் வெறுப்பு காட்டும் வகையிலேயே ராமதாசின் கருத்துக்கள் அமைந்தது. மாவட்ட நிர்வாகிகள் 91 பேரில் குறைந்தபட்ச ஆதரவுதான் ராமதாசுக்கு உள்ளது என்றும் பெரும்பாலானோர் அன்புமணியின் பக்கமே தற்போதுவரை உள்ளதாகவும் இதனால் கட்சியின் அதிகாரம் முழுவதும் அன்புமணி வசமே உள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் அப்படி எடுத்தால் கட்சியை முழுமையாக கலைக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். இதனால் கட்சி முழுமையாக அன்புமணியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதால் என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் ராமதாஸ் குழப்பத்தில் தவித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
The post மாநாட்டு மோதலைத் தொடர்ந்து தைலாபுரத்தில் இன்று நடந்த ராமதாஸ் கூட்டத்தை அன்புமணி 100 மாவட்டச் செயலாளர்கள் புறக்கணிப்பு: நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம் appeared first on Dinakaran.