கோவை, மே 16: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், மாணவர் நலமையத்தில் இலவச போட்டித் தேர்வு மையம் கடந்த 2023-ல் துவங்கப்பட்டது. இம்மையம் மாணவர்கள் போட்டி தேர்வு மூலம் வேலை வாய்ப்பை பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. இதில் வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து பயிற்சி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் பதிவு நடந்தது.
இந்த மையத்தின் மூலம் வங்கி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேளாண்மை அதிகாரிகளுக்கான தேர்வுக்கான பயிற்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. தவிர, எஸ்எஸ்சி தேர்வுகள், ரயில்வே, தபால் துறை போன்ற ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு பேட்ஜ்-க்கு 200 மாணவர்கள் என்ற வகையில், 6 மாத இடைவெளியில் இரண்டு பருவங்கள் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஓய்வுபெற உள்ள பேராசிரியர்கள் மூலம் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் பயிற்சி வகுப்புகளில் வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில், வகுப்புகளை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வாரத்திற்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் பயிற்சி அளித்தால் வேளாண் பல்கலையின் மாணவர்கள் மட்டுமே பயன்பெற முடியும் எனவும், மற்ற கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போட்டித்தேர்வு பயிற்சி மையம் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டது. பின்னர், அரசு கலைக்கல்லூரியில் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மையத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பயிற்சி துவங்குவதற்கு முன்பு எவ்வித அறிவிப்புமின்றி பயிற்சி மையம் மூடப்பட்டது. கோவைக்கான இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும், இந்த மையம் சென்னையில் இரண்டு இடங்களிலும், திண்டுக்கல்லிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கோவையில் துவங்கப்பட்ட பயிற்சி மையம் செயல்பட துவங்குவதற்கு முன்பே மூடப்பட்டதால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தற்போது மாணவர்கள் இலவசமாக போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்க மையம் இல்லாமல் இருப்பதால், மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களிலும், நூலகங்களிலும் சென்று போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் மூடப்பட்ட இலவச போட்டித்தேர்வு மையத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தேர்வு மையத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனவும் போட்டித்தேர்வுக்கு தயராகி வரும் தேர்வர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேர்வர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தற்போது கடும் போட்டி இருக்கிறது. 170 வினாக்களுக்கு பதில் அளித்தால்தான் வேலை என்ற நிலை உள்ளது. தற்போது பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. எனவே, சுயமாக படித்தால் தேர்வில் வெற்றி பெற கூடுதல் காலதாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பதிலாக அரசு சார்பில் போட்டித்தேர்வுக்கு என தனி பயிற்சி மையம் ஏற்படுத்தி கொடுத்தால் எங்களை போல் ஏழை, எளிய மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி கனவு பலிக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவையில் துவங்கி மூடப்பட்ட அரசின் போட்டித்தேர்வு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீண்டும் திறக்க தேர்வர்கள் எதிர்பார்ப்பு; பெரியார் நூலகத்தில் போட்டித்தேர்வு மையம் ஏற்படுத்தப்படுமா?
கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் ரூ.300 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இந்த நூலகம் வரும் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து, பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நூலகத்தில் இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவையின் மையப்பகுதியில் போட்டித்தேர்வு மையம் ஏற்படுத்தினால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் பயன் பெற வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post கோவையில் மூடப்பட்ட அரசின் இலவச போட்டித் தேர்வு மையம் appeared first on Dinakaran.