வேலூர், மே 16: வேலூர் பாலாற்று மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரை அடையாளம் காண மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் விவரங்களை திரட்டுவதில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் அடியில் 11வது தூண் அருகில் வாலிபர் ஒருவர் ரத்தகாயங்களுடன் நேற்று முன்தினம் காலை சடலமாக மீட்கப்பட்டார். இறந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவரது முதுகு பகுதியில் ரத்தக்காயங்கள் இருந்தது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உடன் வந்தவர்கள் யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்தனரா? கொல்லப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் முதலில் இறந்தவர் யார் என்பதை அடையாளம் காண மாவட்டம் முழுவதிலும் காவல் நிலையங்களுக்கு அவரது புகைப்படத்தை அனுப்பியும், காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாலாற்று பாலத்தின் இருபுறமும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு ெசய்து வருகின்றனர்.
The post வேலூர் பாலாற்றில் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? காணாமல் போனவர்கள் பட்டியலை திரட்டும் போலீசார் appeared first on Dinakaran.