பெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘பத்து வருடத்துக்கு முன்பு நான் இந்த நிலைக்கு தள்ளப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த சம்பவம் என் அன்றாட வாழ்க்கையை தடம் புரட்டி போட்டது. ஆனால் இன்று என்னுடைய இயலாமையை பலமாக மாற்றி வெற்றிப் பாதையை நோக்கி பயணித்து வருகிறேன்’’ என்கிறார் ெசங்கல்பட்டை சேர்ந்த டெல்ஃபின். உளவியல் நிபுணரான இவர் ‘ஸ்மைலின் கவுன்சிலில் சர்வீசிஸ்’ என்ற பெயரில் உளவியல் மையம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக பலருக்கு உளவியல் சார்ந்த ஆலோசனை செய்து வருகிறார். மேலும் தமிழ்நாடு சிறப்பு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பிரத்யேக ஆலோசனை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறார். மேலும் வர்க்‌ஷாப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.

‘‘எல்லோரையும் போல் நானும் சாதாரண வாழ்க்கையைதான் வாழ்ந்து வந்தேன். அந்த துயரமான சம்பவம் 2014ல் என் வாழ்வில் நிகழ்ந்தது. நன்றாக இருந்த நான் திடீரென்று கீழே விழுந்தேன். அதன் பிறகு என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை. அன்று முதல் என் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிப் போனது. மருத்துவர்கள் எனக்கு மஸ்குலார் டிஸ்ட்ரபி என்ற தசைநார் தேய்வு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். அதே சமயம் என் அம்மாவின் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. படுத்த படுக்கையானார்.

எங்க வீட்டின் மொத்த சந்தோஷமும் ஒரே நேரத்தில் குழிக்குள் விழுந்தது போல் உணர்ந்தோம். எங்க குடும்பத்தில் அப்பா, அம்மா, நான், அக்கா மட்டும்தான். எங்க இருவரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால், அக்காதான் எங்க இருவரையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அம்மாவின் வருமானம்தான் எங்களின் வாழ்வாதாரம். அது இல்லாமல் போனதால் அக்கா எங்களையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் சென்றாள்.

என்னுடைய இந்த நிலையால் நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அதே சமயம் அக்கா கஷ்டப்படுவதும் என்னை மேலும் பாதித்தது. அதனால் வீட்டில் இருந்தபடியே வருமானத்திற்கு வழி செய்ய திட்டமிட்டு டியூஷன் எடுக்க துவங்கினேன். மேலும் ஆன்லைனில் உடைகளை விற்பனையும் செய்தேன்.

ஓரளவு வருமானம் கிடைத்தது. இப்படியே வீட்டிலேயே நான்கு வருடம் முடங்கி இருந்தேன். அதற்கு காரணம் வெளியே சென்றால் என்னால் சமாளிக்க முடியுமா என்ற பயம்தான். ஆனால் நான்கு வருடமாக வீட்டில் இருந்த எனக்கு அதுவே பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒரே இடத்தில் இருந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தோன்றியது. அதனால் 2018ல் முதல் முறையாக வீட்டில் இருந்து வெளியேறி சென்னையில் ஹாஸ்டலில் தங்கினேன்’’ என்றவர், சென்னையில் தன் படிப்புக்கு ஏற்ப மேலும் சில பயிற்சிகள் மேற்கொண்டது மட்டுமில்லாமல் அரசு வேலைக்கான தேர்வுகளையும் எழுதியுள்ளார்.

‘‘நான்கு வருடம் வீட்டில் முடங்கி இருந்த நான் தனியாக சென்னையில் யாருடைய துணையும் இல்லாமல் இருக்க முடியும் என்று நினைக்கவில்லை. அதற்கு என்னுடைய வில் பவர்தான் காரணம். அதன் மூலம் படித்த தேர்வில் தேர்ச்சிப் பெற்று, ஆரம்ப சுகாதார மையத்தில் ஹெல்த் கவுன்சிலராக பணியில் சேர்ந்தேன். அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து வந்தேன். ஆனால் அந்த சமயத்தில் ேகாவிட் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செங்கல்பட்டிற்கே வந்துட்டேன்.

வீட்டிலேயே என் வாழ்க்கை முடங்கிவிடக்கூடாது, யாரையும் நம்பி இருக்கக் கூடாது, என் வேலையை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் ேபான்ற காரணத்தால்தான் சென்னைக்கே வந்தேன். இங்கு என்னுடைய நிலைக்கு ஹாஸ்டல் கிடைப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் ஒரு சிலர் என் நிலையை புரிந்து கொண்டு ஹாஸ்டலில் தங்க அனுமதி கொடுத்தார்கள். வீட்டில் இருக்கும் வரை என் வேலையை என்னால் செய்து கொள்ள முடியும். ஆனால் காரிலோ அல்லது ஆட்டோவிலோ என்னால் ஏறி உட்கார முடியாது.

அந்த நேரத்தில் டிரைவர்களே என்னை தூக்கி உட்கார வைத்து உதவினார்கள். சில நேரங்களில் நான் போகும் இடத்திற்கு என் நண்பர்கள் வந்திடுவார்கள். வேலைக்கு சேர்ந்த பிறகு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் மையமும் துவங்கினேன். அதில் குறிப்பாக தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு தான் கவுன்சிலிங் அளித்தேன். இதற்கு நானே ஒரு உதாரணம். வீட்டில் முடங்கி இருந்த போது எனக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக கவுன்சிலிங் வழங்க ஆரம்பித்தேன். என்னுடைய நோக்கமே இன்றைய தலைமுறையினரின் மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தினால் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதுதான்’’ என்றவர், தற்போது செங்கல்பட்டில் பகுதி நேரமாக அங்குள்ள சிறப்பு பள்ளியில் கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார்.

‘‘இங்கு வேலை என்று சொன்னதும், வீட்டில் முதலில் சம்மதிக்கவே இல்லை. அங்கு எனக்கு பாதுகாப்பு இருக்காது என்று பயந்தார்கள். மேலும் அவர்கள் நம்மிடம் தவறாக நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொன்னார்கள். முதலில் பயந்தேன். அதே சமயம் அங்கு செல்ல வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன். பிறக்கும் போதே யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை. சூழ்நிலையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும் எனக்கு அங்கு உரிய பாதுகாப்பு கொடுத்தார்கள். நான் சிறைக்கு வெளியே இருந்துதான் அவர்களுடன் பேசுவேன். என்னைச் சுற்றி காவலர்கள் இருப்பார்கள். அதனால் தைரியமாக போனேன்.

கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை காலத்தில் இருக்கும் சிறுவனைதான் முதலில் சந்தித்தேன். எனக்கு முன் பலர் கவுன்சிலிங் செய்ய வரும் போது, சந்திக்க விருப்பமில்லைன்னு நேரடியாக சொல்லிவிடுவார்களாம். அவர்கள் என்னை சந்திக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் என் உடல் நிலை என்று கூட சொல்லலாம். அதே சமயம் என் பேச்சை கேட்டார்கள்னு சொல்ல முடியாது. உடனே மாறிடுவாங்கன்னு சொல்ல முடியாது. முதலில் என்னை அறிமுகம் செய்து, அவர்களுக்கு என் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவேன். அதன் பிறகுதான் அவங்க என்னிடம் பேசவே ஆரம்பிச்சாங்க. என்னிடம் கொஞ்சம் நெருக்கமானார்கள்.

மனசில் இருப்பதை சொல்ல முன்வந்தாங்க. அப்படியும் உண்மையை சொல்ல தயங்குவாங்க. ஆனால் எனக்கு ரொம்பவே பிடித்த இடம் இது தான். விடுமுறை நாட்களில் அவங்களுடன் நேரம் செலவு செய்வேன். காரணம், அவங்க ரொம்ப திறமைசாலிகள். அவர்களின் திறமையை மேலும் ஊக்குவிக்க என்னால் முடிந்த உதவியை செய்வேன். சிலர் நன்றாக படம் வரைவாங்க. அவங்களுக்கு அதற்கான பொருட்களை வாங்கிக் கொடுப்பேன். அவர்கள் என்னிடம் பேச ஒரு மாசமானது.

முதலில் கிண்டல் செய்தவர்கள், அதன் பிறகு என்னை அழைத்து அவர்களின் பிரச்னைக்கான தீர்வு கேட்க ஆரம்பித்தார்கள். அதுவே பெரிய மாற்றமாக நான் நினைக்கிறேன். அதில் சிலர் தங்களின் தண்டனைக் காலம் முடிந்த பிறகு வீட்டிற்கு போயிடுவாங்க. அப்படி போறவங்க என்னுடைய ஆலோசனைபடி நல்ல முறையில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியவர், தன் எதிர்கால திட்டங்களை பகிர்ந்தார்.

‘‘ஆன்லைனில் கவுன்சிலிங் செய்கிறேன். மேலும் நிறைய மோட்டிவேஷனல் ஸ்பீச் தரணும். மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தங்குவதற்கான போதிய வசதிக் கொண்ட தங்கும் விடுதி இல்லை. அவர்களுக்கான சிறப்பு விடுதி ஒன்றை அமைக்க வேண்டும். இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள், படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நான் சென்னையில் தங்க இடம் தேடிய போது நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன். மேலும் மன ஆரோக்கியம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு. பெண்களுக்கு வருமானம் இருந்தாலே வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து தடைகளையும் கடக்க முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம். கல்வி மற்றும் சம்பாத்தியம் இன்றைய பெண்களுக்கு மிகவும் முக்கியம்’’ என்றார் டெல்ஃபின்.

தொகுப்பு: ஷம்ரிதி

The post பெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்! appeared first on Dinakaran.

Related Stories: