எந்தவித அனுமதியும், தரமும் இல்லாமல் புற்றீசல் போல் பெருகி வரும் தள்ளுவண்டி கடைகள்: முறையாக ஆய்வு செய்ய கோரிக்கை

திருவள்ளூர், மே 13: எந்த அனுமதியும், எந்த தரமான உத்தரவாதமும் இல்லாத சிறு, சிறு தள்ளுவண்டி மற்றும் வேன்களில் உணவுகளை விற்பனை செய்யும் கடைகளில் முறையான ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பசி எடுத்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு வருவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100க்கு 90 சதவீதம் இருந்தது. ஆனால் தற்போது அது வெகுவாக குறைந்து 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுவது பேஷன் ஆகிவிட்டது.

இது போன்ற சூழ்நிலையில் தரமான ஹோட்டல்களில் விலை அதிகம் கொடுத்து வாங்க முடியாத ஏழை கூலித் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தார் குறைந்த விலைக்கு வாங்கி சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நாகரிக வளர்ச்சி மற்றும் பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக வீடுகளில் சமைத்து சாப்பிடுவது அதிகளவில் குறைந்து வருகிறது. ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதையே பெரும்பாலான பொதுமக்கள் பழக்கமாக்கி கொண்டுள்ளனர். முறையான கட்டிடங்களில் அரசின் அனுமதி, உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி ஆகியவற்றை பெற்று சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலர் மட்டுமே கடைகளை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது பெரும்பாலான இடங்களில் எந்தவித அனுமதியும் இல்லாமல் தள்ளுவண்டிகளில், வேன்களில், ஷேர் ஆட்டோவில் சிக்கன் பிரியாணி, பீஃப் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் கடைகல் புற்றீசல் போல் பெருகி வருகின்றன.

வசதி படைத்தவர்கள் சைவமாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் தரமான ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் ஏழை நடுத்தர மக்கள் மற்றும் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள், ரயில் நிலையம் அருகில், பேருந்து நிலையம் அருகில் நகரின் முக்கிய வீதிகளில் சாலை ஓரத்தில் திறந்து வைத்திருக்கும் கடைகளில், சிக்கன் பிரியாணி, பீஃப் பிரியாணி, சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், சில்லி சிக்கன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் நோய்களும் பெருகி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அசைவ உணவு வகைகளை சாலையோர, தெருவோர தள்ளுவண்டிகள், ஷேர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் விற்பனை செய்வதை அதிக அளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். அவ்வாறு வாங்கி சாப்பிடும் உணவால் அசௌகர்யம், அல்லது உடல் நல பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களிடம் முறையிடவோ, அல்லது பாதிப்பு குறித்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவோ முடியாமல் போகிறது. காரணம் மீண்டும் அவர்கள் அந்த பகுதியில் கடை நடத்தவில்லை என்றால் வாடிக்கையாளர் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது என்பதால் அதனை ஏழை, எளிய மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்ற சூழ்நிலை தற்போது பெருகியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள் செயல்படக்கூடிய சூழ்நிலையில் எந்த அனுமதியும், எந்த தரமான உத்தரவாதமும் இல்லாத சிறு, சிறு தள்ளுவண்டிகள் மற்றும் வேன்களில் விற்பனை செய்யும் கடைகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உணவு தரமாக இருக்கிறதா? சுத்தமான எண்ணெய்யை பயன்படுத்தி சமைக்கிறார்களா? என்பதையும் திடீர் சோதனைக்கு உள்படுத்த வேண்டும். அதே போல் சிக்கன் பக்கோடா, சில்லி சிக்கன் போன்றவற்றையும் பொது மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் அந்த சிக்கன் கறி தரமானதா, பழையதா, மீதமான கறியா என்பதையும் யாரும் பார்ப்பதில்லை. மேலும் தெருவோர சந்துகளிலும், சாலையோரங்களிலும் கடைகள் வைத்திருப்பவர்கள் முறையாக அனுமதி பெற்று கடையை நடத்துவதில்லை. இதனால் அவர்களை கண்காணிக்க இயலவில்லை.

அதேநேரத்தில், உணவு சமைக்க வணிக சிலிண்டர்? அல்லது வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துகிறார்களா என்பதும் தெரியாமல் உள்ளது. எனவே வணிக நோக்கத்திற்காக செய்யப்படும் உணவிற்கு வணிக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என்ற விதியை இதுபோன்ற வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா என்பதையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என்பதற்காக இது போன்ற தெருவோர, சாலையோர கடைகளில் வாங்கி சாப்பிடாமல் தரமான உணவை வாங்கி சாப்பிடவும் பொது மக்கள் முன்வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post எந்தவித அனுமதியும், தரமும் இல்லாமல் புற்றீசல் போல் பெருகி வரும் தள்ளுவண்டி கடைகள்: முறையாக ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: