வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்ற போது கோர விபத்து பஸ் – வேன் நேருக்கு நேர் மோதல் கேரள வாலிபர்கள் 4 பேர் சாவு: 3 பேர் படுகாயம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே வேன், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டதில் 4 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சாஜிநாத் (27), ராஜேஷ் (33), ராகுல் (32), சஜித் (30), தாபு (40), சுனில் (35), ரஜினிஷ் (30). இவர்கள் 7 பேரும் தினவந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது நாகப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் ஏர்வாடி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனை ஓட்டி சென்ற சாஜிநாத் (27), ராஜேஷ் (33), ராகுல்(32), சஜித்(30) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். தாபு (40), சுனில் (35), ரஜினிஷ் (30) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்போட்டை ஆனந்த், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 4 பேர் உடலையும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஒட்டுநர் சரவணன் மற்றும் நடத்துநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தகவலறிந்து திருவாரூர் எஸ்பி கருண் கரட் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

 

The post வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்ற போது கோர விபத்து பஸ் – வேன் நேருக்கு நேர் மோதல் கேரள வாலிபர்கள் 4 பேர் சாவு: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: