இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மதுரையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே அரங்கில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்த தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது. மழை, காற்று, வெயிலால் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் உள்ளரங்க அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்ட அரங்கத்தின் முன்பாக 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. மேலும், முகப்பு பகுதி ‘அறிவாலயம்’ போல வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களது வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கும் இடவசதி தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 1ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரை, உத்தங்குடி, “கலைஞர் திடலில்” நடைபெறும். அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
தணிக்கைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் -அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே தங்கள் மாவட்டத்தின் பெயர் பொறித்துள்ள கவுண்டரில் வைத்துள்ள ‘மினிட்’ புத்தகத்தில் கையொப்பமிட்டு, தங்களுக்குண்டான ‘பேட்ஜ்’ஐ பெற்றுக் கொண்டு, காலை 9 மணிக்குள் பொதுக்குழு நடைபெறும் கூட்ட அரங்கத்திற்குள் மாவட்ட வாரியாக அமர்ந்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.