தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சாலையோரம் நுங்கு கூடுகள் சிதறி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் நுங்கு ஓடுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு, இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
சாலையோரங்களிலும், முக்கிய வீதிகளிலும் தற்காலிகமாக கடைகள் அமைத்து நுங்கு, இளநீர், கரும்புச்சாறு, தர்பூசணி பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக தஞ்சாவூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் இளநீர் மற்றும் நுங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக நுங்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் நுங்கு சுளையை மட்டும் எடுத்து விட்டு, நுங்கு கூடுகளை சாலையோரம் ஆங்காங்கே வீசி விடுகிறார்கள்.
இதனால் தஞ்சையில் உள்ள பல இடங்களில் நுங்கு மற்றும் இளநீர் கூடுகள் சாலையோரம் சிதறி கிடக்கிறது. தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் தொம்பன்குடிசை மேம்பாலம் இறங்கும் இடத்தில் சாலையோரம் நுங்கு கூடுகள் கொட்டப்பட்டுள்ளன.
மேலும், சில வியாபாரிகள் நுங்கு கூடுகளை மூட்டைகளாக கட்டி போட்டுச் செல்கின்றனர். இந்த நுங்கு கூடுகளை ஆடு, மாடுகள் கிளறி சாலைக்கு கொண்டு வந்து விடுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழும் அபாயம் உள்ளது.
பகல் நேரத்தில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சென்று விடுகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், கோடை வெயிலின் காரணமாக காய்ந்த நுங்கு கூடுகளால் தீவிபத்து ஏற்படும் சூழலும் நிலவுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலையோரம் கிடக்கும் நுங்கு கூடுகளை அகற்ற வேண்டும். சாலையோரங்கள் குப்பைகள் மற்றும் நுங்கு கூடுகளை கொட்டிச்செல்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை வைத்துள்ளனர்.
The post தஞ்சாவூரில் காய்ந்த நுங்கு ஓடுகளால் ஆபத்து appeared first on Dinakaran.