பஹல்காம் தாக்குதல் குறித்து நீதி விசாரணை படைகளின் மனஉறுதியை குலைக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பதேஷ் குமார் சாஹு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள் கூறும்போது,’ நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு கைகோர்த்துள்ள ஒரு முக்கியமான தருணம் இது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் நமது படைகளின் மன உறுதியைக் குலைக்காதீர்கள்.

இந்த வகையான பொதுநல மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினரை மனச்சோர்வடையச் செய்ய விரும்புகிறீர்களா? இந்த வகையான பிரச்னையை நீதித்துறைக்குள் கொண்டு வர வேண்டாம்.
நீங்கள் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கச் சொல்கிறீர்கள். அவர்கள் புலனாய்வில் நிபுணர்கள் அல்ல, ஆனால் ஒரு பிரச்னையை தீர்ப்பளித்து முடிவு செய்ய மட்டுமே முடியும். எங்களை உத்தரவு பிறப்பிக்கச் சொல்லாதீர்கள்’ என்றனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

 

The post பஹல்காம் தாக்குதல் குறித்து நீதி விசாரணை படைகளின் மனஉறுதியை குலைக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: