ஈரோடு: ஈரோடு சந்தையில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு வார காலத்தில், குவிண்டாலுக்கு ஐ.1300 வரை விலை குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் நுகர்வு குறைந்ததாலும், ஏற்றுமதி சரிவடைந்ததாலும் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் இந்த ஏலத்தில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்று மஞ்சள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகின்றனர். ஈரோடு மஞ்சள் சந்தையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் புதிய மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி உட்சபட்சமாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.21,369-க்கு விற்பனையானது. அதன்பின், மஞ்சள் விலை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. பொதுவாக நாடு முழுவதும் மஞ்சள் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், தேவையான அளவு மட்டும் வியாபாரிகள் மஞ்சள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், ஈரோடு மஞ்சள் சந்தை உட்பட அனைத்து சந்தையிலும் வர்த்தகம் குறைவும், விலையில் சரிவும் ஏற்பட்டுள்ளது.
The post ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு appeared first on Dinakaran.