முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசும்போது, “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தை பற்றி இங்கே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தி பேசுகிறபோது அதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்தில் கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பை சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாக சந்தித்து இதுகுறித்து மனுவை தந்திருக்கிறார்கள். எனவே, அதையெல்லாம் பரிசீலித்து பார்த்து, முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 1-4-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும்.

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை பொறுத்தவரையில், மாதம் ரூ.15 ஆயிரம் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75 ஆயிரம் என்பது, ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: