இந்நிலையில்தான், அந்த ரயில்களின் பாதுகாப்பு தொடர்பான அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய ரயில்வேயின் முதன்மை ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கால்நடைகள் மோதும்போது கூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு அறிக்கை தெரிவிக்கிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், ரயிலின் வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது. அதனால் அதிக வேகத்தில் செல்லும்போது கடுமையாக சேதமடைய வாய்ப்புள்ளது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில், மனிதர்கள், கால்நடைகள் குறுக்கிடுவதை தடுக்க வலுவான வேலிகளை நிறுவ வேண்டும்.
பாதிக்கப்படக் கூடிய இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆர்பிஎப் பணியாளர்களை நிறுத்துதல், வழக்கமான ரோந்துப் பணிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தண்டவாளங்களில் பாதுகாப்பாக நகர்த்த அனுமதிக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல் வேண்டும்” என பரிந்துரைந்துள்ளது. இந்த ரயில்வே பாதுகாப்பு அறிக்கையைக் குறிப்பிட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம் வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம்.. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே..” என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்தான தகவல்களுக்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட விளக்கம்: வந்தே பாரத் ரயில்கள் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. உற்பத்தியின் போது நிறுவப்பட்ட கவாச் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. வேகமான முடுக்கம் மற்றும் மணிக்கு 160 கி,மீ வேகம் செல்லக்கூடிய நவீன இணைப்பு வடிவமைப்புகள் கொண்டவை. இந்த ரயில்களின் முன்பகுதி கால்நடைகள் மோதினால் உடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக தண்டவாளத்தில் வரும் எதையும் திசை திருப்புவதற்கு முன்புறத்தில் கால்நடை பாதுகாப்பு உள்ளது.
இதுவரை பல மில்லியன் கிலோ மீட்டர்கள் பயணித்து பூமியின் சுற்றளவை பலமுறை கடந்ததற்கு சமமாக, இந்த ரயில்கள் பாதுகாப்பானவை மற்றும் திறமையானவை என நிருபிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பயணிகளுக்கு நவீன மற்றும் வசதியான ரயில் பயண அனுபவத்தை வழங்கியுள்ளன. உயர் வேகம், மேம்பட்ட பாதுகாப்பு தரங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவை ஆகியவை இந்த ரயிலின் முக்கிய அம்சங்கள் ஆகும். கால்நடைகள் மோதுவதை தடுக்க, இந்திய ரயில்வே நாடு முழுவதும் ரயில்வே பாதைகளில் வேலி அமைத்து வருகிறது. ஏற்கனவே 3500 கி.மீ பாதைகளில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
The post கால்நடைகளின் மீது மோதினால்கூட சேதம் வந்தே பாரத் ரயில்கள் பாதுகாப்பானவையா? தெற்கு ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.