குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசு பள்ளி மாணவர்கள் 30 பேரை கொல்ல முயற்சி: தெலங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: தெலங்கானாவில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசு பள்ளி மாணவர்கள் 30 பேரை கொல்ல முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் கடந்த 12, 13, 14ம் தேதி தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் 30 மாணவர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.

அவர்களுக்கு முன்னதாக பள்ளிக்கு வந்த மதிய உணவு திட்ட ஊழியர்கள், பாத்திரங்களை கழுவ முடிவுசெய்து, குழாயில் இருந்து தண்ணீரை திறந்தபோது அதில் துர்நாற்றம் வீசியது. உடனே குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை பார்த்தபோது, நிறம்மாறி துர்நாற்றம் வீசியது. உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என மாணவர்களை தலைமை ஆசிரியர் எச்சரித்தார்.

இதுகுறித்து இச்சோடா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து நிபுணர்களுடன் சோதனையிட்டதில், தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது அம்பலானது. இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து பள்ளிக்கு முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசு பள்ளி மாணவர்கள் 30 பேரை கொல்ல முயற்சி: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: