கணவர் மீது பொய் புகார் கொடுத்த மனைவிக்கு ரூ.50,000 அபராதம்

புதுடெல்லி: கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது கணவருக்கு எதிராக தொடுத்த அவமதிப்பு வழக்கில், ‘‘எனது பொறுப்பில் உள்ள குழந்தைகளை என் கணவர் நேரில் சந்திக்க கடந்த 2023 அக்டோபரில் விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அவருடன் அவரது பெற்றோர் உள்ளிட்ட யாரும் வரக்கூடாது, புகைப்படம், வீடியோ எதுவும் எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2023 நவம்பரில் தீபாவளி தினத்தன்று எனது அலுவலகத்தில் பெற்றோருடன் வந்து குழந்தைகளை எனது கணவர் பார்த்து செல்லலாம் என உயர் நீதிமன்றம் அனுமதித்தது. இதன்படி, பெற்றோருடன் எனது அலுவலகத்திற்கு வந்த என் கணவர், நான் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் என்னையும், என் குடும்பத்தினரையும், எனது முதலாளிகளையும் அவமதித்தார்’’ என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா, ரேணு பட்நாகர், மனுதாரர் பதிவு செய்த வீடியோவை ஆய்வு செய்து அவரது அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘‘உண்மையில் மனுதாரரும் அவருடன் இருந்த நபர்களும்தான் பிரிந்த கணவரை தூண்டியிருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

அவரது பெற்றோர் அமைதியாக பார்க்கவிடும்படி வலியுறுத்தியும் கேலி கிண்டல் செய்கின்றனர். எனவே பொய் புகார் கொடுத்த மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். அதில் ரூ.25 ஆயிரத்தை கணவருக்கு தர வேண்டும். மீதம் ரூ.25 ஆயிரத்தை 4 வாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும்’’ என்றனர்.

The post கணவர் மீது பொய் புகார் கொடுத்த மனைவிக்கு ரூ.50,000 அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: