மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், வாகனங்களின் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என போலீசாருக்கு செங்கல்பட்டு எஸ்.பி. சாய்பிரனீத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாமல்லபுரம் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், பல மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி சந்திப்பு, சால்வான் குப்பம், பட்டிப்புலம், திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இதனால், இந்த பகுதிகள் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து கவனமாக செல்கின்றனர்.
இந்நிலையில், பட்டிப்புலம் இசிஆர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு துருப்பிடித்து சில தினங்களுக்கு முன்பு உடைந்து சாலையில் விழுந்தது. இதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு, துருபிடித்து சாலையில் உடைந்து கிடக்கும் பேரி கார்டை உடனடியாக அகற்றி புதிய பேரி கார்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
The post மாமல்லபுரம் அருகே சாலையில் உடைந்து கிடக்கும் பேரிகார்டால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.