* மாலை வேளையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்
சென்னை: வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று வெயில் வாட்டி எடுத்தது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் என்பது வழக்கத்தை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருந்தது. சென்னையை பொறுத்தவரை காலை முதலே வாட்டி எடுக்க தொடங்கியது. நேரம் ஆக, ஆக வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் வெயிலின் உக்கிரம் என்பது மிக அதிமாக இருந்தது. சிறிது தூரம் நடந்தாலே உடல் முழுவதும் வியர்க்கும் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
தலையே சுற்றும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருந்ததால் காலை 10 மணிக்கு மேல் சென்னைவாசிகள் அத்தியாவசிய தேவையை தவிர மற்றப்படி வெளியே செல்வதை தவிர்த்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும் அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். அதே நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறிகள் வெப்ப காற்றை அள்ளி வீசியது. வீடுகளில் ஏசி இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு குளிர்ச்சியை அனுபவிக்க முடிந்தது.
மதிய நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்தனர். இதனால், பிற்பகல் வேளையில் சென்னையில் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் என்பது மிக, மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. வெயிலின் கொடுமையால் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயற்கை காற்றை சுவாசிக்கவும் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் தங்கள் பகுதிகளில் அருகில் உள்ள பூங்காக்களை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக படையெடுக்க தொடங்கினர்.
இதனால், மாலை 4 மணி முதல் கடற்கரை பகுதிகள், பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் மக்கள் வெள்ளமாக கடற்கரை, பூங்காக்கள் காட்சியளித்தன. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து பொழுதை போக்கினர். அங்கேயே வீட்டில் இருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை குடும்பத்துடன் சாப்பிட்டு இரவு வரை பொழுதை போக்கினர். இதனால் இரவு 9 மணி வரை கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனையும் களைக்கட்டியிருந்தது.
அது மட்டுமல்லாமல் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வேறு நடந்தது. இந்த போட்டியை மக்கள் வீடுகளில் உள்ள டிவியில் பார்த்தப்படி ஞாயிற்றுக்கிழமை பொழுதை கழித்தனர். வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படக்கூடிய கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்க உள்ளது. இப்போதே இப்படி வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கினால் இன்னும் எப்படி சமாளிக்க ேபாகிறோமோ என்று மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.
The post வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: வழக்கத்தை விட குறைவாக காணப்பட்ட வாகன போக்குவரத்து appeared first on Dinakaran.