பாலியல் வழக்கில் தவறான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்: அலகாபாத் உயர் நீதிமன்ற கருத்துக்கு ஒன்றிய அமைச்சர் எதிர்ப்பு

புதுடெல்லி: பெண்ணின் மார்பகங்களை பிடி ப்பது, ஆடையை இழுப்பது பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகாது என்ற அலகாபாத் உயர் நீதின்றத்தின் தீர்ப்புக்கு ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 11 வயது சிறுமியின் மார்பகத்தைப் பிடிப்பது, பைஜாமாவை கிழிப்பது போன்ற செயல்கள் பலாத்காரமாகவோ அல்லது பலாத்கார முயற்சியாகவோ ஆகாது.

மாறாக மோசமான பாலியல் குற்றச்சாட்டின் கீழ் வரும் என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம்மனோகர் நாராயண் மிஸ்ரா கருத்து தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட 2 பேரை விடுதலை செய்தார். இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ‘இது மிகவும் தவறான முடிவு, நான் இம்முடிவை ஆதரிக்கவில்லை.

நாகரிகமான சமூகத்தில் இத்தகைய முடிவுகளுக்கு இடமில்லை. இந்தத் தீர்ப்பு சமூகத்தில் தவறான பாதிப்பை ஏற்படுத்தும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். இந்த தீர்ப்புக்கு நான் முற்றிலும் எதிரானவள். உச்ச நீதிமன்றம் இதை தீவிரமாகக் கவனிக்க வேண்டும். இது சமூகத்திற்கு தவறான செய்தியை அனுப்பக்கூடும். இது சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.

The post பாலியல் வழக்கில் தவறான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்: அலகாபாத் உயர் நீதிமன்ற கருத்துக்கு ஒன்றிய அமைச்சர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: