இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் சபலென்கா, மிர்ரா அரையிறுதிக்கு தகுதி: மேடிசனும் அபார வெற்றி

இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் நேற்று உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரைனா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா டிமிட்ரீவ்னா சாம்சனோ மோதினர்.

துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 5ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார். அற்புதமாக ஆடிய மேடிசன், 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பென்சிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்னொரு காலிறுதியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 9ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைனை சேர்ந்த எலினா ஸ்விடோலினா உடன் களம் கண்டார்.

முதல் செட்டை போராடி கைப்பற்றிய ஆண்ட்ரீவா, 2வது செட்டை எளிதாக வசப்படுத்தினார். அதனால், 7-5, 6-3 என்ற நேர் செட்களில் அவர் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரை இறுதிப் போட்டியில் மிர்ரா ஆண்ட்ரீவா – இகா ஸ்வியடெக், சபலென்கா – மேடிசன் கீஸ் மோதவுள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.

The post இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் சபலென்கா, மிர்ரா அரையிறுதிக்கு தகுதி: மேடிசனும் அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: