விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா

?விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா?
– பொன்விழி, அன்னூர்.

அவசியம் இல்லை. முதலில் எருக்கம்பூ மாலையை பிரசாதமாக எந்த அர்ச்சகரும் தரமாட்டார். இறைவனின் பிரசாதமாக பெண்களும் அதனை சூடிக் கொள்ள இயலாது என்பதால் அதனை வீட்டிற்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.

?சுக்கிர தசை என்றால் என்ன? அது இருந்தால் அதிர்ஷ்டம் வருமா?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

வளமான வாழ்க்கை வாழ்பவரைக் கண்டு அவனுக்கென்னப்பா சுக்கிரதிசை நடக்குது போல, அதான் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது என்று ஒரு வித ஏக்கத்துடன் அடுத்தவர் சொல்லக் கேட்டிருப்போம். தனது ஆயுட்காலத்தில் சுக்கிர தசை எப்போது வரும் என்பதை அறிய ஜோதிடரை அணுகுவோரும் உண்டு. இதையெல்லாவற்றையும் விட, சுக்கிரதசைதான் நடக்குது, ஆனாலும் படாத கஷ்டம் இல்ல என்று புலம்புவோரும் உண்டு. சுக்கிர தசை ஒருவரை வாழ்வினில் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது, மற்றொருவரை அதள பாதாளத்திற்குள் இறக்கி விடுகிறது, அப்படியானால் உண்மையில் சுக்கிரனின் பணிதான் என்ன என்பதையும் பார்க்கலாம். நவகிரகங்களில் சுக்கிரன் செல்வத்திற்குரிய கோளாக சித்தரிக்கப் படுவது உண்மையே. அதனாலேயே சுக்கிரனை தனகாரகன் என்றழைப்பார்கள். ஆயினும் சுக்கிர தசை பலபேருக்கு கஷ்டத்தையும் தரும். நமது ஜாதகத்தில் சுக்கிரனின் அமர்விடமே இதற்கான முக்கிய காரணம் என்கிறது ஜோதிடம். சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தாலும் சரி, நீசம் பெற்றிருந்தாலும் சரி, நன்மையைத் தரும் பாவகங்களில் அமர்ந்திருந்தால் நற்பலனும், தீய பாவகங்களில் அமர்ந்திருந்தால் தீய பலனும் உண்டாகும் என்பதே அடிப்படை விதி. இது எல்லா கிரஹங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக ஆறாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து சுக்கிரதசை நடந்தால் கடன், நோய் மற்றும் பெண்களால் வம்பு- வழக்கு பிரச்சினைகளும், எட்டாம் இடத்தில் இருந்தால் அநாவசிய ஆடம்பர செலவுகளும், 12ம் இடத்தில் அமர்ந்திருந்தால் சுகத்தினை அனுபவிப்பதில் அதிகமான பொருளிழப்பும் உண்டாகும். மாறாக, சுக்கிரன் 2, 11 ஆகிய தன லாப ஸ்தானங்களில் அமர்ந்து தசை நடந்தால் சிறப்பான தனலாபமும், செல்வச்சேர்க்கையும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை. 4ம் இடத்தில் இருந்தால் வாகனசுகம் கிட்டும். 10ல் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் தொழில் முறையில் சிறப்பாக பரிணமிப்பார்கள். 6, 8, 12ல் அமரும் சுக்கிரன் முதலில் ஒரு சுகத்தினைத் தந்து அதன்மூலம் பிரச்னையைத் தோற்றுவித்திருப்பார். உழைக்காமல் கடனை மட்டும் வாங்கிக்கொண்டு வாழ்க்கையை சிறிது காலம் சுகமாக அனுபவித்து பின்பு சிரமப்படுபவர்களுடைய ஜாதகங்களில் இந்த அம்சத்தினைக் காண இயலும். ஆக சுகத்தினைத் தரும் கிரஹம் சுக்ரன் என்பது உண்மையே. ஆயினும் அது நிரந்தரமானதா, அல்லது தற்காலிகமானதா என்பதை சுக்ரனின் அமர்விடமே நிர்ணயம் செய்யும். உண்மையாக உழைப்பவருக்கு அதிர்ஷ்டத்தினைத் தந்து வாழ்வினில் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் பணியை சுக்கிரன் செய்வார். சுக்ரவாரம் எனும் வெள்ளிக் கிழமையில் குத்து விளக்கினை ஏற்றி வைத்து 108 காசுகளைக் கொண்டு மஹாலட்சுமிக்கு உரிய நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்து வர சுக்ரனின் அனுக்ரஹத்தினைப் பெற்று சுகமாக வாழ இயலும்.

?கிழக்கு பார்த்த நூறு சிவாலயங்களை தரிசித்த பலன் மேற்கு பார்த்த ஒரு சிவாலயத்தில் கிடைத்துவிடும் என்கிறார்களே, அது ஏன்?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இந்த கூற்றினில் உண்மை இல்லை. அது உண்மையென்றால் கிழக்கு நோக்கி ஆலயத்தை கட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே. எல்லா ஆலயங்களையும் மேற்கு நோக்கியே கட்டியிருக்க இயலுமே. மேற்கு நோக்கிய ஆலயங்களுக்கு தனிமகத்துவம் என்பது உண்டு. இதுபோன்று மேற்கு நோக்கிய சிவாலயங்கள் சிறந்த பரிகார ஸ்தலங்களாக அமைகின்றன. சனி தோஷம், கலி தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற கடுமையான தோஷங்களை நீக்கும் பரிகார ஸ்தலங்களாக மேற்கு நோக்கிய சிவாலயங்கள் பார்க்கப்படுகின்றன என்பது உண்மை. அதேநேரத்தில் ஒரு மேற்கு நோக்கிய சிவாலயத்தை தரிசித்தால் கிழக்கு பார்த்த நூறு சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை.

?இரண்டு மற்றும் நான்கு சக்கர வண்டி புதிதாக வாங்கும்போது பதிவு எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பது வர வேண்டும் என்கிறார்களே, ஏன்?
– எம். மனோகரன், ராமநாதபுரம்.

ஒன்பதாம் எண் என்பது செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. சாலைவழிப் போக்குவரத்திற்கு அதிபதி செவ்வாய் என்பதால் அந்த எண்ணைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள். அவரவர் ஜாதக பலத்திற்கு ஏற்ப வாங்கும் வாகனத்தின் எண்ணை தீர்மானித்துக் கொள்ளலாம். ஒன்பதாம் எண்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

?மனைவி ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும்போது கணவர் மலையேறக் கூடாது என்பது அறிந்த விஷயம். அந்தப் பெண்ணின் மாமனார் மற்றும் மாமியாருக்கு இந்த விதி பொருந்துமா?
– ரா. ரகுராம ஐயர், திருவாரூர்.

பொருந்தாது. இந்த விதியானது அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் மட்டுமே பொருந்தும்.

?அத்தி மரத்தில் செய்யப்பட்ட சுவாமி சிலையை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?
– ஜி.செல்வமுத்துகுமார், கடலூர்.

வழிபடலாம். மரத்தில் செய்யப்பட்ட ஸ்வாமி சிலைகளுக்கு என தனியாக பிரதிஷ்டாபன விதிமுறை ஏதும் இல்லை என்பதால் மரச்சிலைகளை வைத்து வழிபடலாம். இதற்கு மானசீகமான பக்தியே போதுமானது.

?தலைவிதியை மாற்ற இறைவனால் முடியுமா? ஒரு நிகழ்வை குறிப்பிடுங்கள்.
– கே.ஏ.நாராயணன், மருங்கூர்.

அனைவரும் அறிந்த நிகழ்வு ஒன்று உண்டே. மார்க்கண்டேய புராணம் நாம் அனைவரும் அறிந்தது தானே. மார்க்கண்டேயன் 16வது வயதில் மரணமடைய வேண்டும் என்பது தலைவிதி. ஆனால் பரமேஸ்வரனின் திருவருளால் எமதர்மனின் பாசக்கயிறு பலமிழந்ததுடன் அந்த எமதர்மனே சம்ஹாரம் செய்யப்பட்ட கதையும் நாம் அறிந்ததுதானே. ஆக இறைவனின் திருவருள் இருந்தால் இந்த உலகத்தில் தலைவிதி மட்டுமல்ல, எல்லாவற்றையும் மாற்ற இயலும்.

The post விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா appeared first on Dinakaran.

Related Stories: