வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத 8 இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்ற கட்டிடத்தின் 3வது மாடியில் 7 கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள் உள்ளன. இந்த கூடுதல் அமர்வு நீதிமன்றங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகள் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளாகும். 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 15ம் தேதி, வடபழனி காவல் நிலையத்தில் கடந்த 1997ல் பதிவான வெடிகுண்டு வழக்கு, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 1997ல் பதிவான கொடுமையான காயத்தை ஏற்படுத்தி கொள்ளை முயற்சி வழக்கு, சிபிசிஐடி போலீசால் கடந்த 1996ல் பதிவு செய்யப்பட்ட அரசு முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், கூட்டுச்சதி குற்ற வழக்கு, கடந்த 2004ல் சீரணி அரங்கம் போலீசார் பதிவு செய்த கூட்டு கொள்ளை வழக்கு, கடந்த 2007ல் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பதிவான கொடுங்காயம் விளைவித்து கொள்ளை முயற்சி வழக்கு, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கடந்த 1995ல் பதிவான கொலை முயற்சி வழக்கு, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2010ல் பதிவான கொலை வழக்கு, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2010ல் பதிவான கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிடிவாரன்ட் அமல்படுத்த கால அவகாசம் கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தியுள்ளன. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 309(2)ல் நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துவிட்டால் அந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரினால் அதற்கு உரிய காரணங்கள் தரப்பட வேண்டும். அந்த காரணம் அப்போதைக்கப்போது நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தொடர்ந்து அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு சம்பந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஒத்துழைப்பதில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நவம்பர் 25ம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத 8 இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: