தீபாவளி கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமால் அனுமதிக்கலாம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படகிறது. இதையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வர். இதனால் பல சுங்கச்சாவடிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படும். பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதன் காரணமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் தகராறு செய்வதும் நடக்கிறது. பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், வாகன நெரிசலை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் தொடர்ந்து அனுமதிக்கலாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இதனை பின்பற்ற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர். சுங்கச்சாவடிகளில் வாகனங்களை தடுப்பு போட்டு நிறுத்தி பின் பாஸ்ட் டேக் வாயிலாக பணம் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டால் அதுபோல வாகனங்களை நிறுத்தி, நிறுத்தி அனுப்பாமல் தொடர்ந்து அனுப்பவும், சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளி கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமால் அனுமதிக்கலாம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: