இரவில் நீலம், பகலில் பச்சை நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள்

 

புதுச்சேரி, அக். 21: புதுச்சேரியில் நேற்று முன்தினம் வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் கடற்கரை சாலையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலர், கடலில் குளித்தும், கால் நனைத்தும் விளையாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் இரவு 9.15 மணியளவில் காந்தி சிலை அருகே கடலில் திடீரென நீல நிறத்தில் கடல் அலைகள் ஒளிர்ந்தன. காந்தி சிலைக்கும், டிஐஜி அலுவலகத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இந்த காட்சி தென்பட்டது. இதனை பலரும் பார்த்து வியந்தனர்.

மேலும், தங்களது செல்போன்களில் இந்த காட்சியை படம் எடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் இதேபோல் நீல நிறத்தில் கடல் அலைகள் ஒளிர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன.

அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான ‘டைனோ ப்ளாச்சுலேட்’ வகையை சேர்ந்த ‘நாட்டிலுக்கா சின்டிலன்ஸ்’ எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது. இதனை ‘சீ பார்க்கல்ஸ்’ அல்லது கடல் பொறி என  அழைக்கப்படுகிறது. இந்த மிதவை நுண்ணுயிரி, கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் உணவு ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, இருளில் ஒளி வீசி ஜொலிக்கிறது.

இந்த நுண்ணுயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது ஒளி வெளியாகிறது. அப்போது அந்த பகுதியின் அலை ‘புளோரசன்ட் நீல’ நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வை பயோலுமினெசென்ஸ் என  அழைக்கப்படுகிறது என்றார். இந்நிலையில் புதுச்சேரி கடல்பகுதியில் நேற்று காலை முதல் பச்சை நிறத்தில் கடல் அலைகள் காணப்பட்டது. இதனை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தில் நேற்று கடல்நீர் பச்சை நிறத்தில் மாறியது.

The post இரவில் நீலம், பகலில் பச்சை நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் appeared first on Dinakaran.

Related Stories: