கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் பரபரப்பு கட்டணம் செலுத்தாத 2 அரசு பேருந்து நிறுத்தி வைப்பு

கள்ளக்குறிச்சி, அக். 10: கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் பணம் செலுத்தாததால் 2 அரசு பேருந்தை ஊழியர்கள் நிறுத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மிழ்நாடு அரசு விழுப்புரம் கோட்டம் போக்குவரத்து கழக பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி போக்குவரத்து அரசு பணிமனை கிளையில் இருந்து இயக்கப்பட்டு சென்னை சென்றுவிட்டு நேற்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கள்ளக்குறிச்சி அடுத்த வி.பாளையம் டோல்கேட் வந்தது. அப்போது டோல்கேட்டில் கட்டணம் செலுத்த பாஸ்டாக்கில் போதுமான இருப்பு இல்லாததால் ரூ.225 பணத்தை செலுத்திவிட்டு செல்லுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். உடனே நடத்துனர், ஓட்டுநர் சம்மந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும் பாஸ்டாக் கணக்கில் பணம் செலுத்த நேரமானதால் காலதாமதம் ஏற்பட்டு பேருந்தில் பணம் செய்த பயணிகள் டோல்கேட் ஊழியர்களிடம் பேருந்தை விடுவிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் விரைந்து வந்து டோல்கேட் ஊழியர்களிடம் பேசி பேருந்தை விடுவிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து 30 நிமிடம் கழித்து விடுவித்தனர். இதேபோல் திருக்கோவிலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்திலும் பாஸ்டாக்கில் தொகை இல்லாததால் நிறுத்தி வைத்தனர். பின்னர் போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பேருந்தை அனுப்பி வையுங்கள் தொகை செலுத்திவிடுகிறோம் என தெரிவித்ததையடுத்து சிறிது நேரம் கழித்து பேருந்தை டோல்கேட் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் பரபரப்பு கட்டணம் செலுத்தாத 2 அரசு பேருந்து நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: