×
Saravana Stores

தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பு; தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கத்தில் ஜவுளி விற்பனை மும்முரம்

சென்னை: தீபாவளி பண்டிகை வருகிற 31ம்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு. மேலும் தீபாவளி நெருங்க, நெருங்க துணிமணிகள் வாங்க கூட்டம் அதிகரிக்க கூடும். அது மட்டுமல்லாமல் சென்னை உள்பட பல்வேறு பல மாவட்டங்களில் காலையில் இருந்து சாரல் மழை பெய்தது. சூரிய பார்க்க முடியாத நிலை தான் இன்று காலை முதல் இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க இன்று காலை முதல் பஜார் வீதிகளில் திரள தொடங்கினர். குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

அவர்கள் தங்களுக்கு தேவையான பேண்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்ெதடுத்து வாங்கினர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் வந்து குவிந்துள்ளது. புதிய மாடல் ஆடைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது. பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இன்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்து இருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

வர்த்தக பகுதியான சென்னை தியாகராயநகர், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், குரோம்பேட்டை, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை நேரத்திலேயே வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கி சென்றனர். மாலை 4 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இரவு 10 மணி வரை இந்த கூட்டம் காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் தீபாவளி பர்சஸில் மும்முரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு துணிகடைகள் முன்பாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் வரும் நாட்களில் பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இறுதிக்கட்ட தீபாவளி பர்சேஸ்ஸை சமாளிக்கும் வகையில் கடைகளை காலையிலேயே திறக்கவும் கடைக்காரர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டாசு, சுவீட் விற்பனை:
தீபாவளி பண்டிகையில் புத்தாடைகளுக்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிப்பது பட்டாசும், சுவிட்டும் தான். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் தெருக்களிலும் புதிதாக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நண்பர்கள், விருந்தினர்களுக்கு சுவிட் வழங்குவதற்காக சுவிட் கடைகளில் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து சுவிட் கடைகளில் கடந்த சில நாட்களாக ஆர்டர்கள் வந்து குவிந்த காட்சியை காண முடிந்தது.

பஸ், ரயில் ஹவுஸ் புல்:
சென்னையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சார்ந்தவர்கள், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், அவர்கள் முன்கூட்டியே ரயில்களில் முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாகியுள்ளது. அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் அதிக அளவில் இருந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகை 31ம் தேதி வருகிறது. நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2ம் தேதி சனிக்கிழமை, 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையை கொண்டாட நிறைய பேர் சிறப்பு ரயில்கள், பஸ்களை நாட தொடங்கியுள்ளனர். மேலும் அரசு, தனியார் பஸ்களிலும் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது.

The post தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பு; தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கத்தில் ஜவுளி விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Tamil Nadu ,Chennai ,Nagar, Vannarappettai ,Purasaivakkam Chennai ,Diwali ,Nagar ,Vannarapettai ,Purasaivakam ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...