காரைக்காலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மண் அள்ளுவதற்கு ராயல்டி வழங்க வேண்டும்

 

காரைக்கால்,அக்.19:காரைக்காலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் 2022 முதல் மண் அள்ளுவதற்கான ராயல்டி தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் மாவட்ட கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குட்பட்ட பகுதிகளில் மணல் அள்ளுவதற்குரிய ராயல்டி தொகை வருவாய் துறை மூலம் வசூல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல், கடந்த 2013-14 முதல் நவம்பர் 2022 வரை உள்ள ராயல்டி தொகை காரைக்கால் பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு G.O.Ms.No.21/DRDM/C2/2023/6866, தேதி.6.12.2023 படி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 2022 முதல் உள்ள ராயல்டி தொகை வழங்கப்படாமல் உள்ளது. ஆகவே, கடந்த டிசம்பர் 2022 முதல் உள்ள ராயல்டி தொகையை காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post காரைக்காலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மண் அள்ளுவதற்கு ராயல்டி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: