தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

சேந்தமங்கலம், அக்.19: புதுச்சத்திரம் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழு கூட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சங்கர் கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில பணிமூப்பு முறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாநில பொருளாளர் முருக.செல்வராசன், மாவட்ட துணை செயலாளர் ஜெயவேலு, நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியப் பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

The post தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: