சல்மான்கானை கொல்ல ரூ.25 லட்சம் பேரம்: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

மும்பை: கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் சல்மான்கான் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் அவரது பண்ணை வீட்டை நோட்டமிட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நவிமும்பை போலீசார், இது தொடர்பாக அஜய் காஷ்யப், கவுரவ் பாட்டியா, வஸ்பிகான், ரிஸ்வான் கான், தீபக் ஹவா சிங் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அரியானாவைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி சுக்பீர்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘‘லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சார்பில், சல்மானை கொலை செய்ய ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. சுக்பீர் சிங், இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த தோகர் என்பவருடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அங்கிருந்து ஏ.கே 47, ஏகே 92, எம் 16 ஆகிய நவீன ஆயுதங்களை காட்டியுள்ளார். 50 சதவீதம் முன்பணம் ெகாடுத்த பிறகு ஆயுதங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக தோகர் உறுதி அளித்துள்ளார். இந்த ஆயுதங்களையும், துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஜிகானா துப்பாக்கியையும் வாங்க திட்டமிட்டுள்ளனர். சல்மானைக் கொலை செய்துவிட்டு, கன்னியாகுமரியில் அனைவரும் கூடி, அங்கிருந்து இலங்கைக்கு படகு மூலம் தப்பியோட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஏப்ரல் வரை சல்மான் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* பாபா சித்திக் கொலையில் தொடர்பு?
சல்மானை கொலை முயற்சி வழக்கில் அரியானாவைச் சேர்ந்த சுக்பீர் சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் அரியானாவைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே, பாபா சித்திக் கொலையில், சுக்பீர் சிங்குக்கு தொடர்பு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

The post சல்மான்கானை கொல்ல ரூ.25 லட்சம் பேரம்: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: