9 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக ஒன்றிய அமைச்சர் பாகிஸ்தான் பயணம்

இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.
காஷ்மீர் பிரச்னை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே சரியான உறவு இல்லை. இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ஜெய்சங்கரின் விமானம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள நூர் கான் விமான தளத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு தரையிறங்கியது. அவரை பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

இரு நாடுகள் இடையேயான உறவுகள் பதற்றமாக இருந்தபோதும், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை. இன்று ஷாங்காய் ஒத்துழைப்புமாநாட்டில் ஜெய்சங்கர் பேசுவார் என்று தெரிகிறது. கடைசியாக பாகிஸ்தான் சென்ற ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆவார்.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் தொடர்பான ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவின் வெளியுறவுச் செயலராக இருந்த ஜெய்சங்கர், சுஷ்மா சுவராஜ் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

The post 9 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக ஒன்றிய அமைச்சர் பாகிஸ்தான் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: