பிரபல மலையாள முன்னணி நடிகரான சித்திக் தன்னை பலாத்காரம் செய்ததாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை போலீசில் புகார் கூறினார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு 2 வாரங்கள் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அவர் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல மணிநேர விசாரணைக்குப் பின் அவரை போலீசார் விடுவித்தனர். நேற்று திடீரென சித்திக் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். திருவனந்தபுரத்திலுள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைத்து சிறப்பு விசாரணைக் குழு எஸ்பிக்களான மெரின் ஜோசப் மற்றும் மதுசூதனன் ஆகியோர் அவரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
யூடியூப் சேனல் மூலம் அவதூறு 2 நடிகை, நடிகர் மீது வழக்கு: பிரபல மலையாள நடிகர்களான முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு உள்பட 7 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எர்ணாகுளம் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகை போலீசில் புகார் கொடுத்தார். இந்த நடிகை எர்ணாகுளம் நெடும்பாசேரி போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் , நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி மற்றும் அவரது கணவரும், நடிகருமான மனோஜ் ஆகியோர் என்னைப் பற்றி, அவர்களது யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து நடிகைகள் ஸ்வாசிகா, பீனா ஆண்டனி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள மாவேலிக்கரையை சேர்ந்த ஒரு பெண் உதவி இயக்குனர் கொச்சி மரடு போலீசில் ஒரு பலாத்கார புகார் கொடுத்துள்ளார். அதில், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி டைரக்டர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பரான விஜித் விஜயகுமார் ஆகியோர் தன்னை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து டைரக்டர் சுரேஷ் திருவல்லா, விஜித் விஜயகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நடிகை பலாத்கார புகார் நடிகர் சித்திக் மீண்டும் போலீசில் ஆஜர் appeared first on Dinakaran.