×

கிண்டி ரேஸ் கோர்ஸில் ஜிம்கானா கிளப் நிர்வகிக்கும் கோல்ப் கிளப்பில் நீர்நிலை அமைக்க தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில், குதிரை பந்தய சுற்றுப்பாதை வழித்தடத்தின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இதனை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது. ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களை சீல் வைத்துள்ளது. இதனை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் சில பணிகளை மேற்கொண்டு வருவதால், கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கிளப் உறுப்பினர்கள், இந்த கோல்ஃப் மைதானத்தில் விளையாடி வந்தனர். மைதானத்தை பராமரிக்க ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் செலவிட்டு வருகிறோம். கடந்த 1951ம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் கிளப் ஹவுஸ் கட்டப்பட்டது. அங்குள்ள சமையலறை, மனமகிழ் மன்றம், மதுபான பாரில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வசதிகளை 500 உறுப்பினர்கள் வரை வழக்கமாக பயன்படுத்தி வந்தனர். நாட்டிலேயே பழமையான 3வது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து, நீர்நிலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சேதத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். எனவே, நீர்நிலை அமைக்க பள்ளம் தோண்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிம்கானா கிளப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ஜேசிபி டிராக்டர் புல்டோசர் போன்ற இயந்திரங்களைக் கொண்டு 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போதைய நிலையை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆ.செல்வேந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதிடும்போது, அரசு நிலத்தை சென்னை ரேஸ் கிளப்புக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டது. இது அரசு நிலம். அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. இதே கோரிக்கையுடன் உரிமையியல் வழக்கையும் ஜிம்கானா கிளப் தொடர்ந்துள்ளது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த மனுவுக்கு அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post கிண்டி ரேஸ் கோர்ஸில் ஜிம்கானா கிளப் நிர்வகிக்கும் கோல்ப் கிளப்பில் நீர்நிலை அமைக்க தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ca ,Gymkhana Club ,Guindy Race Course ,Madras High Court ,CHENNAI ,Race Club ,Madras Gymkhana Club ,Kindi Race Course ,Dinakaran ,
× RELATED சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம்...