×

அரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. ஆனால் பிற்பகலில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் பாஜ வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளிவந்தன. இந்த முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. அரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜ 48 இடங்களையும், 39.9% வாக்குகளையும் பெற்றிருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சி 39.3% வாக்குகளை பெற்று 37 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.ஏறத்தாழ சம அளவில் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் தோல்வியடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 37 சதவிகித வாக்குகளை பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 49 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல, 25.6 சதவிகித வாக்குகளை பெற்ற பாஜ 29 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. இந்த தேர்தல் முடிவுகளையும், அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் தேர்தல் ஆணையம் ஏதோ ஒரு வகையில் பாஜகவின் வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

The post அரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Aryana ,Jammu ,EC ,CHENNAI ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthagai ,Ariana and Jammu and Kashmir assembly elections ,Congress ,National Conference Party ,Ariana, ,and Kashmir ,Election Commission ,Dinakaran ,
× RELATED அரியானா, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை...