மனித உடலில் 500 பணிகள் செய்யும் அரிய உறுப்பு; ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காவு வாங்கும் கல்லீரல் பாதிப்பு : ஹெபடைடிஸ் கிருமிகளால் தொடரும் அபாயம்


கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர்உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வுகளில் தெரிவித்துள்ளது. ஹெபடைடிஸ் பாதிப்பை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ம் ஆண்டளவில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் முக்கியத்துவம் மிகவும் அவசியம். எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரல் நோயைத் தடுக்கவும் 2030ம் ஆண்டுக்குள் ஹெபடைடிஸ் ஒழிப்பு இலக்குகளை அடையவும் பரிசோதனை மற்றும் சிகிச்சையை அதிகரிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.மனிதர்களின் உடலில் உள்ள மூளை, இதயம் போன்ற மற்றொரு முக்கிய உறுப்பு கல்லீரல். உடலுக்கு தேவையான பல்வேறு செயல்களை கல்லீரல் மேற்கொள்கிறது.

நாம் உட்கொள்ளும் உணவுகளை ஆற்றலாக மாற்றி தேவையான சத்துக்களைப் பிரித்துக் கொடுப்பது, உடலுக்கு தேவையான சில புரதச்சத்துக்களை உற்பத்தி செய்வது, உணவில் உள்ள நச்சை நச்சற்றத்தாக மாற்றுவது போன்றவை கல்லீரலால் நிகழும் முக்கிய பணிகளாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு செரிமானம், புரத உற்பத்தி, சேமித்தல், நச்சற்றத்தாக மாற்றுதல் என ஏறக்குறைய 500 முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது. நமது கல்லீரலை பாதிக்கக்கூடிய இரண்டு பிரதான விஷயங்களாக மதுவும், வைரஸ் தொற்றும் உள்ளன.

கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம் கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஹெபடைடிஸ் வைரஸில் 5 வகைகள் இருந்தாலும் அதில் பி, சி ஆகிய வைரஸ் தான் தீவிர தன்மை வாய்ந்தது என்கின்றனர் கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள்.

இது குறித்து மருத்துவநிபுணர்கள் மேலும் கூறியதாவது: பொதுவாக கல்லீரல் அழற்சியை அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோய் என்று அழைக்கின்றனர். காரணம், இதனால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் அது குறித்து எதுவும் அறியாமல் இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கல்லீரல் அழற்சியை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் அது மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். காய்ச்சல், உடல் சோர்வு, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, ரத்த வாந்தி போன்றவை கல்லீரல் அழற்சிக்கான அறிகுறிகள்.

ஹெபடைடிஸ் ஏ, இ காரணமாக ஒரு சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளடைவில் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் பாதிப்பால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய முடியாது. இதையே சிர்ரோசிஸ் என்று அழைக்கின்றனர். சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டுவிட்டால், குணப்படுத்துவது கடினம். கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கால், கைகளில் நீர் சேர்ந்துவிடும், மயக்க நிலை ஏற்படும், ரத்த வாந்தி ஏற்படலாம். தீவிரம் அடைந்து மஞ்சள் காமாலை நோயையும் ஏற்படுத்துகிறது.

மற்றொரு முக்கிய விஷயம் ஹெபடைடிஸ் பி காரணமாக எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம். ஹெபடைடிஸ் சி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் உள்ளன. ஆனால், இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைடிஸ் பி, சி ஆகியவை வந்துவிட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டிவைரல் மாத்திரைகள் உள்ளன. சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டு கல்லீரல் செயலிழந்துவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஹெபடைடிஸ்-பி தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் நிலையில், தற்போது குழந்தைகளுக்கு பிரசவத்தின்போதே தடுப்பூசி போடப்படுகின்றன. இதனால், ஹெபடைடிஸ்-பி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மருத்துவநிபுணர்கள் கூறினர்.

தனிநபர் சுகாதாரம் பேணுவது அவசியம்
நமது சுற்றத்தை சுத்தமாக வைத்திருப்பது மூலம் ஹெபடைடிஸ் ஏ, இ போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். தனிநபர் சுகாதாரத்தைப் பேண வேண்டும். உணவு அருந்துவதற்கு முன்பாக கைகளை கழுவுவது, கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை சுத்தமாக கழுவுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். டாட்டூ போடும் இடங்கள், முடி திருத்தகம் போன்ற இடங்களில் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, பிளேடு போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வதன் மூலமும் ஹெபடைடிஸ் பி, சி ஏற்படாமல் தவிர்க்கலாம்,’’ என்பது மருத்துவ நிபுணர்கள்
வழங்கியுள்ள அறிவுரை.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
‘‘ஹெபடைடிஸ் ஏ, இ போன்றவை பெரும்பாலும் தானாகவே சரி ஆகிவிடும். போதிய நீர்ச்சத்துகளை எடுத்துகொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஹெபடைடிஸ் ஏ, பி வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் உள்ளன. இதற்கு மூன்று ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஊசி போட்டு 1 மாதம் கழித்து இரண்டாவது ஊசி, 6 மாதம் கழித்து மூன்றாவது ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்,’’ என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகள் கழித்தே தெரியும்
‘‘அதிகளவில் பரவக்கூடிய வைரஸாக ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ உள்ளன. இந்த வைரஸ்கள் உடலிலேயே தங்கி பல ஆண்டுகள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும். ஹெபடைடிஸ்-பி மிகவும் அரிதானது. நோய்த்தொற்றுடன் தொடர்புடையது. அதாவது ஹெபடைடிஸ் பி தொற்று பாதிப்பு இல்லாமல் ஒருவருக்கு ஹெபடைடிஸ்-டி ஏற்படாது. கர்ப்பிணி பெண்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஹெபடைடிஸ்-இ பாதிப்பு அதிகமாக இருக்கும். ஹெபடைடிஸ் ஏ-வை போன்று ஹெபடைடிஸ் இ-யும் தண்ணீருடன் தொடர்புடையது. மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது’’ என்பதும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

The post மனித உடலில் 500 பணிகள் செய்யும் அரிய உறுப்பு; ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காவு வாங்கும் கல்லீரல் பாதிப்பு : ஹெபடைடிஸ் கிருமிகளால் தொடரும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: