கொத்தனாரை கொன்று சாலையோரம் உடல் வீச்சு

வானூர், அக். 9: கொத்தனாரை படுகொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா தைலாபுரம் அருகே கொஞ்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரகுமார்(40), கொத்தனார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தைலாபுரம் அருகே காணிப்பட்டு சாலை ஓரத்தில் சாக்கு பையில் கட்டி ஒருவர் உடல் கிடப்பதாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டவர் காணாமல் போன கொஞ்சமங்கலத்தை சேர்ந்த ருத்ரகுமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இறந்தவருடைய மனைவி விஜயலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. தடயவியல் நிபுணர்களும் கொலையான உடலில் இருந்த அடையாளங்களை சேகரித்னர். மேலும் கிளியனூர் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து, ருத்ரகுமாரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், கள்ளத்தொடர்பால் கொலை ெசய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ருத்ரகுமாருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கொத்தனாரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசிசென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கொத்தனாரை கொன்று சாலையோரம் உடல் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: