×

மாகாளய அமாவாசையையொட்டி வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாகாளய அமாவாசையையொட்டி, போரில் வீர மரணமடைந்த இந்திய ராணுவப்படை வீரர்களின் நினைவை போற்றி, அவர்களின் உருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.

மாகாளய அமாவாசை அன்று நமது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி, மாகாளய அமாவாசைக்கு முன்பாக வரும் சதுர்த்தசி திதியில் கொடுக்கப்படும் தர்ப்பணத்திற்கு ஸஸ்த்ரஹத மாகாளயம் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது, ஆயுதங்களால் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அன்றைய தினத்தில் அவர்களது தியாகத்தையும், வீரத்தையும் எண்ணி அவர்களுக்கு நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்தால் அவர்களது ஆன்மா வீரசொர்க்கம் அடையும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ஆலோசனையின்படி, ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய நாட்டிற்காக போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவை போற்றி புஷ்பாஞ்சலியும், வீரவணக்கமும் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ராணுவப்படை வீரர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டு, போரில் வீர மரணமடைந்த வீரர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேசிய மாணவர் படை மாணவர்களின் வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கூரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் அவில்தார் ஏகாம்பரம், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அஸ்சாம் மாநில எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரமரணம் அடைந்தார். அவரது, தியாகத்தை போற்றி அவரது குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ராணுவப்படை வீரர்கள் நல சங்க ஆலோசகர் கேப்டன் சுப்பிரமணி, “தியாகம் போற்றுவோம்’’ எனும் தலைப்பில் பேசினார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் தெய்வசிகாமணி வரவேற்றார் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post மாகாளய அமாவாசையையொட்டி வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Pushpanjali ,Magalaya Amavasi ,Kanchipuram ,Indian Army ,Magalaya Amavasya ,
× RELATED வீட்டுமனையை அளவீடு செய்யாததை...