×

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை: வீடியோ வைரலால் பரபரப்பு

குன்றத்தூர்: போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போரூர் அடுத்த மதனந்தபுரம், மாதா நகர் மெயின் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் தங்கி, யாசகம் பெற்று வரும் பெண்களில் சிலர் பானிபூரி வாங்கி, அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், அந்த பெண்களை தகாத வார்த்தையில் பேசி திட்டியதோடு, ராதா என்ற பெண்ணின் மீது தான் எடுத்து வந்த கோஸ் மூட்டையை எடுத்து மேலே போட்டுள்ளார். அத்துடன், தனது ஆத்திரம் தீராமல் வீட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து, அந்த பெண்ணின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனைகண்ட அக்கம், பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த நபரை தடுக்கச் சென்றபோது, அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அப்பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பெண்ணுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Borur ,Madhananthapuram ,Mata Nagar Main Road ,Yazakam ,
× RELATED தண்ணீர் லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியர் பலி