பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

விருதுநகர்: பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார் என மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார். அக்டோபர் 2-ம் தேதியான இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி ஜயந்தி விழா மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள் ஆகியவை அனுசரிக்கப்பட்டது. விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் காமராஜரின் உருவ சிலைக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி., சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பேசுகையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்திருப்பது பா.ஜ.க. அரசின் சதி. கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக உள்ள முதல்வர் சித்தராமையாவை அவமானப்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறையை வைத்து இப்படியொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்வோம். பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பே நாட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது.

இந்த மாதிரியான பணபரிவர்த்தனைகளை ஒன்றிய நிதி அமைச்சகம் கண்டுகொள்வதில்லை. எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்ற ஆய்வில் மட்டும் குறியாக செயல்படுகிறது பாஜக. சட்டவிரோத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசாக பாஜக உள்ளது. இதை தொடர்ந்து பேசிய அவர்; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உண்டியல் பணம் மீதே கடந்த ஆட்சியில் கைவைக்கப்பட்டிருப்பதாக கூறுவது ஏற்கமுடியாது. அவர், பா.ஜ.க.வின் ஊதுகோலாக செயல்படுகிறார். பா.ஜ.க செய்ய நினைப்பதை பவன் கல்யாண் சொல்கிறார். மக்களுக்கு நலனுக்கு எதிரான மத அரசியல் கையிலெடுக்கிறார். இது ஆந்திர மக்களுக்கு அவர் செய்யும் துரோகம் என்றார்.

The post பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: