நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஜெயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டத்தில், வாசலில் நின்ற ஜெயலட்சுமி மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர், 2 குழந்தைகள் ஆகியோர் காயமின்றி மீட்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்த மழையால் நேற்று இரவு 10:30 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு அருகில் உள்ள ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் மீது விழுந்தது. மண்சரிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர சத்தத்தினால் பதற்றமடைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஜெயலட்சுமி மீது மண் சரிவு விழுந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையறிந்த அங்கிருந்த மக்கள் இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஜெயலட்சுமியை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். மேலும் வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர் ரவி மற்றும் 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The post நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: