நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை

வாஷிங்டன்: அரசுமுறை பயணமாக மூன்று நாட்கள் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தசூழலில், கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு சென்றார். அங்கு மரியன்ஸ்கி அரண்மையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.

இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதியளித்தார். இந்த சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், கடந்த மாதம் உக்ரைனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மேற்கொண்ட ஒப்பந்தங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம்.

உக்ரைனில் விரைவில் அமைதி திரும்ப இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம் நம்பிக்கை தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார். ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக சந்திக்கிறேன். இருதரப்பு நாடுகளின் உறவுகளை வளர்த்து வருகிறோம். மேலும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுகிறோம். சர்வதேச அரசியல் தளங்களில் குறிப்பாக ஐநா மற்றும் ஜி20-யில் எங்கள் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும், உக்ரைனில் அமைதி திரும்பது குறித்தும், இரண்டாவது அமைதி உச்சி மாநாட்டிற்கு தயாராவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: