மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை

சென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பொதுமக்களின் மாறா அன்பை பெற்ற மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில், அவர் இறுதி மூச்சு வரையில் நீண்டகாலம் வாழ்ந்த சென்னை-34, நுங்கம்பாக்கம் காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி’ என பெயர் மாற்றம் செய்ய உரிய ஆவன செய்ய வேண்டும்.

இதை அவருடைய ரசிகன் என்ற முறையிலும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சார்பிலும், என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன் மற்றும் தயாநிதி மாறன் எம்பி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வார்டு கவுன்சிலர் சிற்றரசு ஆகியோரிடமும் எஸ்.பி.பி.சரண் மனு அளித்துள்ளார்.

The post மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: