சென்னையில் இருந்து லண்டன், சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் 4 மணிநேரம் தாமதம்: 400 பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் 2 விமானங்கள் சுமார் 4 மணி நேரம் தாமதம் ஆனதால் 400க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்தனர். லண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இருந்து, எதிர்முனையில் வர வேண்டிய விமானங்கள் தாமதம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமானது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று 4 மணி நேரம் தாமதமாக, காலை 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. லண்டனிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரவேண்டிய இந்த விமானம் காலை 8 மணிக்கு தாமதமாக வந்தது. இதையடுத்து மீண்டும் காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது.

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு தாமதமாக சென்னை வந்தது. இதையடுத்து இந்த விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இந்த இரு விமானங்களும் எதற்காக தாமதமாக வந்தன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
இதனால் இந்த 2 விமானங்களிலும் பயணிக்க இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து அவதிக்கு உள்ளாகினர். விமானத் தாமதம் குறித்து பயணிகளுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டாலும், பயணிகள் முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

The post சென்னையில் இருந்து லண்டன், சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் 4 மணிநேரம் தாமதம்: 400 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: