ஓமலூர் அருகே தூங்கிய போது பயங்கரம் கூலித்தொழிலாளி கழுத்தறுத்து கொலை

*மனைவியை கைது செய்து விசாரணை

ஓமலூர் : சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காமலாபுரம் ஆசாரி தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(65). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு வெங்கடேஷ், ரமேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வம் தனது மனைவி பூங்கொடியுடன் அருகிலுள்ள வெல்லம் காய்ச்சும் கரும்பு ஆலையில், கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களாக பூங்கொடி மனநலம் பாதிக்கப்பட்டவரை போல் தானாக பேசுவது, வீட்டில் உள்ளவர்களை திட்டுவது, வீட்டின் வெளியே யார் சென்றாலும் கத்தியை எடுத்துக் கொண்டு, அவர்களை விரட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம், வெல்லம் காய்ச்சும் ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு வந்த செல்வம், போதையில் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இதனிடையே, நேற்று காலை அரிவாள் மனையால் கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் செல்வம் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் போதையில் படுத்திருந்த செல்வத்தை, பூங்கொடி அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், பூங்கொடியின் உடலில் ரத்தக்கறை ஏதும் இல்லாததால், அவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், பூங்கொடி உண்மையாகவே மனநலம் பாதித்தவரா?, செல்வத்தை அவர் தான் கொலை செய்தாரா என்பது குறித்து மனநல மருத்துவரை கொண்டு விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் மோப்ப நாய் கொண்டு போலீசார் துப்பு துலக்கினர். இதில், அந்த நாய் வீட்டையே சுற்றி சுற்றி வந்தது. இதையடுத்து, பூங்கொடியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கணவனை கழுத்தறுத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அவருக்கு மனகுழப்பம் ஏற்படும் சமயங்களில், கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு, கண்ணில் பட்டவர்களை விரட்டுவாராம். அதேபோல், மன குழப்பம் ஏற்பட்டிருந்த சமயத்தில், வீட்டிற்கு போதையில் வந்த கணவனின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில், பூங்கொடியை போலீசார் கைது செய்தனர்.

The post ஓமலூர் அருகே தூங்கிய போது பயங்கரம் கூலித்தொழிலாளி கழுத்தறுத்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: