சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல்?.. சார்ஸ், ஒமிக்ரானை காட்டிலும் வீரியமிக்கதாக இருக்கும்

நியூயார்க்: சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 27 நாடுகளில் புதியவகை கொரோனா ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல் உள்ளதாக கூறப்படும் நிலையில், இவ் வைரஸ் சார்ஸ், ஒமிக்ரானை காட்டிலும் வீரியமிக்கதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வுஹான் இறைச்சி சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பான வைரஸ்களை ஆய்வு செய்த வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்தது என்றும் அதன் பெயர் கொரோனா வைரஸ் என்றும் கூறினர். இந்த வைரஸ் பரவலால் உலகமே இருண்ட கண்டமாக மாறியது.

ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். சீனாவின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதா? அல்லது ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா? என்ற சர்ச்சை இன்னும் தொடர்கிறது. கொரோனா தொற்றுநோய் பரவலின் உச்சக்கட்ட காலகட்டத்தின் போது ‘SARS-CoV-2’ என்ற வைரசை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர். அதில் புதிய வகை உருமாறிய வைரஸ்கள் இருந்தன. இவ்வாறாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக உருமாறிய கொரோனா வைரஸ் பட்டியலில் ‘எக்ஸ்இசி’ (XEC) என்ற ெகாரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உருமாறிய வைரஸ் கடந்த ஜூனில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் 16-17%, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் 11-13% தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தி இன்டிபென்டன்ட்’ நாளிதழ் வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட 500 மாதிரிகளில் ‘XEC’ என்ற வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உருமாறிய வைரசானது உருமாறியய ‘ஒமிக்ரான்’ வைரசின் துணைப் பிரிவாகும். அதாவது KS.1.1 மற்றும் KP.3.3 துணை வகைகளின் கலப்பின வைரசாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தோன்றிய உருமாறிய வைரசை காட்டிலும் இதுமிகவும் வீரியமிக்கதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று பரவலாக கிடைக்கும் ெகாரோனா தடுப்பூசிகள் ‘எக்ஸ்இசி’ வைரசுக்கு எதிராகப் போராடும் என்றும், இந்த வைரசில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் ஜெனடிக்ஸ் இன்ஸ்டிட்யூட் இயக்குனர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் கூறுகையில், ‘‘எக்ஸ்இசி’ வைரஸ் தீவிரமான வைரசாக இருந்தாலும், தடுப்பூசிகள் இருப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை’ என்றார்.

அதேபோல் கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் ட்ரான்ஸ்லேஷனல் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனர் எரிக் டோபோல் கூறுகையில், ‘புதிய வகை ‘எக்ஸ்இசி’ வைரஸ் இப்போதுதான் பரவத் துவங்குகிறது. குறிப்பிடத்தக்க ஓர் அலையை உருவாக்க இன்னும் பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் ஆகலாம். இந்த வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை இழப்பு, பசியின்மை மற்றும் உடல் வலி உள்ளிட்டவை இருக்கும். முந்தைய காலகட்டத்தில் கோவிட்-19 வகைகளைப் போலவே இருக்கும்’ என்றார். ஏற்கனவே கொரோனாவில் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது புதிய வகை ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல்?.. சார்ஸ், ஒமிக்ரானை காட்டிலும் வீரியமிக்கதாக இருக்கும் appeared first on Dinakaran.

Related Stories: