ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு

கீவ்: ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது மிக பெரிய டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட நாட்டின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. உக்ரைன் ராணுவம் சமீப காலமாக ரஷ்யா மீது திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களால் ரஷ்ய படை பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில்,ரஷ்யாவின் டெவர் மாகாணத்தில் டோரோபெட்ஸ் நகரில் உள்ள மிக பெரிய ஆயுத கிடங்கின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் இருந்து 500 கிமீ தொலைவில் டோரோபெட்ஸ் நகர் உள்ளது. மொத்தம், 11,000 பேர் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என்று உக்ரைன் அதிகாரி தெரிவித்தார். தாக்குதலுக்குப் பிறகு, 6 கி.மீ பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் லேசான அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் ரஷ்யாவின் சொந்த ஆயுதங்களை விட வட கொரியாவின் ஏவுகணைகளும் இருந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

The post ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: