மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு!

மணிப்பூர்: மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்டக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, மேற்கு இம்பால், தவுபால் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 10-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு, அங்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20-ந்தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: