அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு :டிரம்ப் காயமின்றி உயிர் தப்பியதாக பாதுகாப்புப்படை தகவல்!

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்திய நேரப்படி சுமார் 11.30 மணி அளவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது மறைந்து இருந்த நபர் ஒருவர், ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அதை அறிந்த பாதுகாப்புப் படை வீரர்கள், உடனடியாக ட்ரம்பை அருகில் இருந்த அறைக்குள் கொண்டு சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்க உளவுப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த துணை அதிபர் கமலா ஹாரீஸ், அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்றும் ட்ரம்ப் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை 13ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது, ட்ரம்ப் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் காது பகுதியில் குண்டு பாய்ந்த ட்ரம்ப், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தற்போது மீண்டும் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை போலீஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

The post அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு :டிரம்ப் காயமின்றி உயிர் தப்பியதாக பாதுகாப்புப்படை தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: