நகை, பணம் கொள்ளையடிக்க குளிர்பானத்தில் சையனைடு கலந்து 4 பேரை கொன்ற 3 பெண்கள் கைது: போனில் நட்பாக பழகி வரவழைத்து கொடூரம்


திருமலை: ஆந்திராவில் நகை, பணம் கொள்ளையடிக்க குளிர்பானத்தில் சையனைடு கலந்து 4 கொலைகள் செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், செப்ரோலு மண்டலம் வட்லாமுடி கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் சடலமாக கிடந்தார். அதில் உயிரிழந்தவர் ஷேக் நாகூர் பி என தெரியவந்தது. போலீசார் ஷேக் நாகூர் பியின் மகன் ஷேக் தமீஜ்ஜிடம் விசாரணை நடத்தினர். அதில், ஷேக் நாகூர் பி, ரஜனி மற்றும் வெங்கடேஸ்வரி என்பவர்களுடன் அவ்வப்போது செல்போன் மூலம் பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்போன் டவர் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப ஆதராங்களை வைத்து விசாரணை செய்தனர். அதில், ரஜனி, வெங்கடேஸ்வரியுடன் தொடர்புடைய மகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் மகேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கடந்த ஜூன் 5ம் தேதி ஷேக் நாகூர் பி மற்றும் அவருடன் 3 பெண்களை வட்லமுடி சந்திப்பிற்கு அழைத்து சென்றதும், மேலும் அவர்கள் ஆட்டோவில் குளிர்பானத்துடன் பயணம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குண்டூர் மாவட்டம், தெனாலியில் உள்ள யாட்லா லிங்கய்யா காலனியில் வசிக்கும் ரஜனி(40), வெங்கடேஸ்வரி(32), கோந்து ரமணம்மா(60) ஆகியோரை 2 நாட்களுக்கு முன்பு பிடித்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்கள் கூட்டாக சேர்ந்து ஷேக் நாகூர் பியை கொலை செய்தது தெரியவந்தது. இதற்காக போனில் ஷேக் நாகூர் பியிடம் நட்பாக பழகி திட்டமிட்டு அழைத்துச் சென்று சையனைடு கலந்த குளிர்பானத்தை வழங்கி குடிக்க வைத்துள்ளனர்.

அதனை ஷேக் நாகூர் பி, உட்கொண்டவுடன் உயிரிழந்த நிலையில், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களைத் திருடி கொண்டு உடலை வயலில் அப்படியே விட்டு சென்றுவிட்டது தெரியவந்தது. மேலும் இதேபோன்று மேலும் மூன்று கொலைகள் செய்ததும், 2 பெண்களைக் கொல்ல முயற்சித்திருப்பதும் போலீசார் விசாரனையில் கண்டுபிடித்தனர். இதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.

The post நகை, பணம் கொள்ளையடிக்க குளிர்பானத்தில் சையனைடு கலந்து 4 பேரை கொன்ற 3 பெண்கள் கைது: போனில் நட்பாக பழகி வரவழைத்து கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: