கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது தனது முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதில், கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக் கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், தான் நேர்மையானவன் என மக்கள் சொல்லும் வரை முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்றும் 2 நாளில் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கெஜ்ரிவால் நேற்றுமுன்தினம் அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஆளுநர் வி.கே.சக்சேனா நேரம் ஒதுக்கி உள்ளார். அப்போது கெஜ்ரிவால் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கெஜ்ரிவால் பதவி விலகுவதைத் தொடர்ந்து ந்து டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

* அடுத்த முதல்வர் யார்?
கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதைத் தொடர்ந்து, இன்று காலை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. கெஜ்ரிவால் வீட்டில் நடக்கும் இக்கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அல்லது அமைச்சர் அடிசி உள்ளிட்டோர்களில் யாராவது ஒருவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

The post கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: